Tuesday, February 15, 2011

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)

ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)

ஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா??
இந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா??
பாகம் 2

1969க்கு பிறகு - மே 13 இனக்கலவரத்தை காரணம் காட்டி தேர்தல் வெற்றிகள் - துங்கு இராசிலியின் வீழ்ச்சி; அன்வரின் எழுச்சி!!


தங்களது அரசியல் இலாபத்திற்காக, பல வேளைகளில், ஒற்றுமையை சீர்குழைக்கும் வண்ணம் இருக்கும் நடவடிக்கைகளேயே அம்னோ மேற்கொண்டுள்ளது என்பதை பல வேளைகளிலும் நாம் கண்டுள்ளோம். அவ்வாறேல்லாம் அம்னோ செயல்படும்போதெல்லாம், மசீசவும், மஇகா மௌனமாகவே இருந்து வந்துள்ளன. 1969இல், எதிர்கட்சிகளின் திடிர் முன்னடைவுகளை எதிர்பாராத அம்னோ, ஒரு இனக்கலவரத்தை அரங்கேற்றி, ஒரு உண்மையான தேசியவாதியான துங்குவிடமிருந்து ஆட்சி பறிப்பை (Coup-De-Etat) மேற்கொண்டது. அந்த தாக்கத்தை வைத்து, அதற்கு அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி. அதற்கும் அடுத்த பொதுத்தேர்தலை, உண்மையான தேசியவாத சிந்தனையுடைய ஓன் ஜாஃபாரின் புதல்வரான துன் உசேன் ஓன் தலைமையில் எதிர்நோக்கியதால், தேசிய முன்னணி சுலபமாகவே வென்றது. அதற்குப் பிறகு பொறுப்பேற்ற மகாதீர் காலத்தில், அம்னோவில் உட்கட்சி பூசல் உச்சிக்குப்போனது. அம்னோ தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு, மகாதீரின் தலைமையில் “அம்னோ பாரு” தோற்றுவிக்கப்பட்டது. துங்கு இராசாலியின் தலைமையில் “செமாங்காட் 46” தோற்றுவிக்கப்பட்டது. மலாய்க்காரர்களின் கட்சி என்பதால், மலாய்க்காரர்களை ஈர்க்க மகாதீர் உபயோகித்தது இனவாத கொள்கை. அக்காலக்கட்டத்தில், புத்துணர்ச்சி மிக்க இளைஞராக மகாதீரை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், கிளாந்தான் அரசக்குடும்பத்தை சேர்ந்த துங்கு இராசாலியின் புகழைக்கண்டு மகாதீர் பயந்தார் என்பதே உண்மை. மலாய்க்காரர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் அல்லாதோரையும் அந்த கிளாந்தான் இளவரசர் கவர்ந்திருந்தார். எக்காலக்கட்டத்திலும் இனத்துவேச கருத்துகளை வெளியிட்டிறாத ஒரே அம்னோ தலைவர் துங்கு இராசாலி. சாமான்ய மக்களோடு அன்னோன்யமாக பழகும் தனது இயல்பான குணத்தால் மக்களை பெரிதும் கவர்ந்திருந்த துங்கு இராசாலியை வெல்ல மகாதீரின் இனவாத பிராச்சாரங்கள் பெரிதும் உபயோகமானது. இனவாத பிரச்சாரங்களின் வழி, சீனர்களை அதிகமாக கொண்டுள்ள ஜசெகாவோடும், இந்தியர்களை அதிகம் கொண்டுள்ள ஐபிஎஃப்போடும் கூட்டணி வைத்துள்ள செமாங்காட் 46 வென்றால், மலாய்க்காரர்களின் சிறப்புரிமை கேள்விக்குறியாகி விடும் என்ற பிரச்சாரம் மலாய்க்காரர்களிடமும்; எதிர்க்கட்சி வென்றால், மீண்டும் “மே 13 1969” கலவரங்கள் தலைத்தூக்கும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இனவாத பிராச்சாரங்களில் கூட ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அம்னோ. முடிவு, 1990 தேர்தல் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு அபார வெற்றி.


1990 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “செமாங்காட் 46” கட்சியை உடைக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டார் மகாதீர். அதன் விளைவாக, அப்துல்லா படாவி, இராய்ஸ் யாத்தீம் உட்பட பல தலைவர்களும் மீண்டும் அம்னோவிற்கே திரும்பினர். 1990க்குப் பிறகு வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார் மகாதீர். அந்த வளர்ச்சியின் பங்கை முடிந்த வரை தனது சுற்றியுள்ள விசுவாசிகள் பங்கிட்டுக்கொள்ளவும் அனுமதித்தார். பல அம்னோ கிளை, தொகுதி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள், அரசாங்க குத்தகைகள் என்று பலவாறான வசதிகளைப் பெற்றனர். இதுப்போன்ற அனுகூலங்கள், மஇகாவிற்கும், மசீசவிற்கும் வழங்கப்பட்டன. மசீச அதனை ஏதோ தனது சமூகத்தை முன்னேற்ற உபயோகித்துக் கொண்டது. உண்மையில், எத்தனை சதவீதம் சமுதாயத்திற்கு சென்றது, எத்தனை சதவீதம் கட்சி உறுப்பினர்களுக்கு சென்றது என்பது தெரியவில்லை. மஇகாவிற்கு, TV3, Telecoms, MAS, Petronas என்று பல பங்குகள் ஒதுக்கப்பட்டாலும், அவை உறுப்பினர்களை சென்று சேர்ந்ததா, அல்லது ஒரு சில தலைவர்களை மட்டுமே சேர்ந்ததா என்பது அந்த தலைவர்களுக்குத்தான் வெளிச்சம் (மஇகாவின் முக்கிய தலைவரே, தான் பேசாமல் நாசி லெமாக் விற்கப்போகிறேன் என்று விரக்தியில் கூறியுள்ளதால், உண்மையிலேயே இந்த பங்குகள் எல்லாம் எங்குதான் போயின என்பதுதான் புரியவில்லை). இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்ரோல் ஸ்டேசன்களைக்கூட கட்சி உறுப்பினர்களுக்குத்தான் (ஒரு சில தொகுதி தலைவர்கள்) தந்தேன் என்று சாமிவேலுவே ஒரு முறை கூறியுள்ளார். ஆகவே, ஒட்டு மொத்தத்தில், நாட்டின் துரித வளர்ச்சியின் வாயிலாக வந்த நேரடி, பொருளாதார அனுகூலங்கள் ஒரு குறிப்பிட்டத் தரப்பினரையே, அதாவது, ஆளும் கூட்டணி கட்சியின் ஊருப்பினர்களுக்கே சென்று சேர்ந்தது என்பதுதான் உண்மை. இருந்தாலும், துரித வளர்ச்சியை முன்னிறுத்தி 1995 பொதுத்தேர்தலை சந்தித்த மகாதீரின் தேசிய முன்னணி, மீண்டும் வெற்றிக்கண்டது. மகாதீரின் இராஜதந்திரத்தால், உடைக்கப்பட்ட “செமாங்காட் 46” ஏற்க்குறைய முழுமையாக இந்த 1995 தேர்தலில் காணாமல் போனது எனலாம்.

1995 தேர்தலுக்குப் பிறகு அன்வார், அம்னோவிற்குள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதற்கு முன்பு, சுதந்திர காலம் தொட்டு அம்னோவின் உறுப்பினராக இருந்து, டத்தோஸ்ரீ, தான்ஸ்ரீ என்று எந்தவொரு பட்டத்தையும் ஏற்காமல் சேவையாற்றி வந்த கபார் பாபாவை தோற்கடிக்க அன்வாரை உருவாக்கினார் மகாதீர். கபார் பாபாவும் அம்னோ பொதுப்பேரவையில் தோற்றார். அதற்குப்பிறகு, துன் பட்டத்தை அவருக்கு வழங்கி ஓய்வும் கொடுத்தார் மகாதீர். இயல்பிலேயே போராட்டக்குணத்தைக் கொண்ட அன்வார், மகாதீரோடு ஆரம்பக்காலங்களில் இணக்கமாகத்தான் பணியாற்றினார். ஆனால், கட்சி தலைவர்கள், ஒரு சில மேல்மட்ட தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளத்தை சுருட்டுவது சரியல்ல எனபது அன்வாரின் கருத்து. சாதரண பொது மக்களை அந்த வளங்கள் சென்றடையாவிட்டாலும், தேசிய முன்னணி அடிமட்ட தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமாவது அந்த வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதினார் அன்வார். இதன்வழி அதிகமான சாமான்யர்கள் தேசிய முன்னணி கட்சியில் இணைவார்கள்; கட்சியும் பலம்பெறும் என்பது அன்வாரின் வாதம். மகாதீர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. நம்மை சுற்றியுள்ள தலைவர்களுக்கு நாம் கொடுப்போம்; அவர்கள் தங்களது தொண்டர்களுக்கு கொடுப்பார்கள்; தொண்டர்கள் மக்களுக்கு தர வேண்டியதை தருவார்கள் என்பது மகாதீரின் வாதம். நாட்டின் வளம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் சுருட்டப்படுவதை அனவார் ஏற்றுக்கொள்ளவில்லை. சில காலம் மௌனமாக இருந்த அன்வார் 1998 மத்தியில் மகாதிருக்கெதிரான தனது காயை நகர்த்த தொடங்கி விட்டார். தோற்கடிக்க முடியாது என்று நினைத்த கபார் பாபாவையே தோற்கடித்த அன்வாரின் பலத்தை உணர்ந்த மகாதீர், தன்னுடைய காய்களையும் கவனமாக நகர்த்த தொடங்கினார். அதன் விளைவாக 1998இல், இடைக்கால பிரதமராக அன்வாரை அறிவித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஓய்வென்ற சாக்கில், அன்வாருக்கெதிரான வலை பின்னப்பட்டது. அந்த திட்டங்களின் முக்கிய பங்குதாரர், இப்பொழுதைய பிரதமர். 1998இல் அம்னோ பொதுப்பேரவையில், “க்ரோனீசம்” (Cronyism) எனப்படும், சுருட்டல் முறைகேடுகள் அம்னோவிலும், பாரிசானிலும் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தினார். மகாதீரின் ஆதரவாளர்களுக்கும், அன்வாரின் நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது.

No comments:

Post a Comment

How to keep your employees respectful